புலிகள் மீள்வருகை குறித்து விஜயகலா மகேஸ்வரன் கூறிய கருத்துத் தொடர்பில் விளக்கம் பெறுவதற்கு நட்பு ரீதியாக விஜயகலாவுக்கு ஏற்படுத்திய தனிப்பட்ட அழைப்பை ஊடக சந்திப்பில் பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க வெளியிட்டதாக கூறப்படுகிறது.
கொழும்பில் பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க நேற்று செய்தியாளர் மாநாடு ஒன்றை நடத்தியிருருந்தார்.
அதன்போது விஜயகலா மகேஸ்வரன் விடுதலைப்புலிகள் மீள உருவாக வேண்டும் என தெரிவித்த கருத்து தொடர்பில் தனது கையடக்க தொலைபேசியில் இராஜங்க அமைச்சரை தொடர்பு கொண்டு உரையாடினார்.
அதன்போதே தனது கருத்து தொடர்பில் விளக்கம் கொடுத்த பின்னர் இராஜாங்க அமைச்சர் சுமார் 20 நிமிடங்கள் தொலைபேசி ஊடாக உரையாடினார்.
இந்த உரையாடலை ஊடக சந்திப்பில் வெளிப்படையாக அனைவரும் கேட்கும் வகையில் செயற்படுத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனினும் இவ்வாறு ஊடக சந்திப்பில் விஜயகலாவுடனான உரையாடலை வெளிப்படுத்துவது பற்றி ரஞ்சன் விஜயகலாவிடம் அனுமதி பெறவில்லை என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
ரஞ்சன் ராமநாயக்கவுடனான உரையாடலில் வடக்கின் உண்மை நிலவரங்கள் பலவற்றை துல்லியமாக விஜயகலா வெளிப்படுத்தி உள்ளார்.
யுத்தத்தின் பின்னரான மக்களின் நிலை –
யுத்தத்தின் பின்னரான வறுமை..
யுத்தத்தின் பின்னரான வேலைவாய்ப்பின்மை..
யுத்தத்தின் பின்னரான சமூக சீர்கேடுகள்…
யுத்தத்தின் பின்னரான இரணுவம் – பொலிசாரின் அத்து மீறல்கள்..
யுத்தத்தின் பின்னரும் மக்களின் காணிகளை கையகப்படுத்தி வைத்திருக்கின்றமை..
யுத்தத்தின் பின்னரான வாழ்வெட்டு கலாசாரமும் பின்னணியில் படையினர் இருப்பதும்…
யுத்தத்தின் பின்னராக போதைப்பொருட்களின் ஆதிக்கம்…
போதைப்பொருட் கடத்தல்களின் பின்னணியில் அரசியல்வாதிகள் – பாதுகாப்பு தரப்பினரின் பங்கு…
சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டுவதில் பொலிஸாரின் அசமந்தப் போக்கு…
என யாழ்ப்பாணத்தின் அவலத்தை கொழும்பின் ஊடகங்கள் கூடிய சந்திப்பில் வெளிப்படுத்தி உள்ளார்.
ரஞ்சன் ராமநாயக்க மற்றும் விஜயகலா மகேஸ்வரனின் உரையாடல்கள் பின்வருமாறு:
ரஞ்சன் : கொழும்பில் வைத்து, உங்கள் கணவரும் தமிழீழ விடுதலைப் புலிகளினால் கொல்லப்பட்டார்.
விஜயகலா: இல்லை, பைத்தியமா, ரஞ்சன் நீங்கள் பார்த்தீர்களா புலிகள் கொலை செய்வதனை. எல்.ரீ.ரீ சுடும் போது நீங்கள் பக்கத்தில் இருந்தீர்களா?
ரஞ்சன் : நீங்கள் தமிழ் வாக்குகளை இலக்கு வைத்து தானே இந்த கருத்தை வெளியிட்டீர்கள். அது சரியில்லை. பயங்கரவாதத் தலைவர் ஒருவரை மீளக் கொண்டு வர வேண்டுமெனக் கோருவது ஏற்றுக்கொள்ள முடியாது.
விஜயகலா : ஐயோ ரஞ்சன் சிலவேளைகளில் பேசும் போது எமக்கு டென்சென். தவறுதலாக வார்த்தைகள் வரக் கூடுமல்லவா என்றவாறு உரையாடல் அமைந்துள்ளது.