பாணந்துறையில் இளம் யுவதி ஒருவரை வெட்டிக்கொலை செய்ததாக சந்தேகிக்கப்படும் இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாணந்துறை, வலான ஊழல் தடுப்பு பிரிவில் பணியாற்றும் பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கழுத்து வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார்.
23 வயதான சந்திமா பிரியதர்ஷனி சந்திசேகர என்ற பெண்ணே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். கொல்லப்பட்டவர் அவரின் வீட்டிற்குள்ளே வைத்து தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளார்.
கொலைச் சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் 27 வயதான இளைஞன் ஹாலிஎல பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் கொல்லப்பட்ட யுவதியின் காதலன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் உயிரிழந்த யுவதியின் வீட்டிற்கு அருகில் உள்ள தோட்டத்தின் அதிகாரியாக செயற்பட்டுள்ளார்.
உயிரிழந்த யுவதி விடுமுறை பெற்று வீட்டிற்கு சென்றுள்ளார். பின்னர் இன்று ஒரு மணியளவில் சந்தேக நபர் அவரது வீட்டிற்கு உணவு கொண்டு சென்றுள்ளார்.
எனினும் சிறிது நேரத்தின் பின்னர் வீடு தீப்பற்றுவதனை அவதானித்த அயலவர்கள் பொலிஸாருக்கு அறித்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் இரத்த கறை படிந்த கத்தி ஒன்றை மீட்டுள்ளதுடன், வீட்டில் இருந்த பொருட்கள் சேதமடைந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.