யாழ்ப்பாணத்தில் ஏட்டுச்சுவடி கண்காட்சி

யாழ்ப்பாணத்தில் ஈழத்து தமிழ் ஆவணங்களையும், நூலக நிறுவனத்தின் ஏட்டுச்சுவடிகளையும் ஆவணப்படுத்தலுக்கான கண்காட்சி ஒன்று ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது.

இக்கண்காட்சி கொக்குவில், ஆடியம்பாதம் வீதியில் நேற்று, இன்று மற்றும் நாளை ஆகிய மூன்று தினங்களாக நடைபெற்று வருகின்றது.

EAP-1056 திட்டத்திற்கமைவாக 60,000க்கும் அதிகமான சுவடி பக்கங்கள் அடையாளம் காணப்பட்டதுடன் 25,000க்கும் அதிகமான சுவடி பக்கங்கள் எண்ணி மேம்படுத்தப்பட்டு வருகின்றன.

விநாயகபுராணம், தோம்பு, மாந்திரீகம், சித்தமருத்துவம், மாணிக்கவாசகர் சரித்திரம், தென்கோவில் புராணங்கள், கந்தபுராணங்கள் என்பவை இதில் அடங்குகின்றன.

அத்தோடு சுவடிகள் பாதுகாக்கப்படும் முறை மற்றும் எண்ணி மேம்படுத்தும் முறையும் இங்கு காண்பிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

பிரித்தானிய நூலகத்தின் சர்வதேச நியமங்களை பின்பற்றி இச்செயற்றிட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.