தமிழகத்தில் விசாரணைக்கு வந்த காதல் ஜோடியை 15 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம், ஒசரவிளை பெருமாள்புரத்தைச் சேர்ந்தவர் ஓவியர் ஜெயபால். நாம் தமிழர் கட்சியின் ஒன்றியச் செயலாளராக உள்ளார்.
அதே ஊரைச் சேர்ந்த ஸ்டாவினுக்கும், ஜெயபால் மகள் டிக் ஷோனாவுக்கும் காதல் ஏற்பட்டது. கடந்த 5 ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்த நிலையில் இவர்கள் இரண்டு பேரின் வீட்டிலும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இந்நிலையில் கடந்த 10-ஆம் திகதி ஜெயபால் தனது குடும்பத்துடன் கன்னியாகுமரிக்கு சுற்றுலா சென்றுள்ளார்.
கடற்கரைச் சாலையில் உள்ள கழிவறைக்குச் செல்வதாகக் கூறிவிட்டு சென்ற டிக் ஷோனா, நீண்ட நேரமாகியும் திரும்பி வராததால், அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அவரை பல இடங்களில் தேடிப் பார்த்தனர், எங்கும் கிடைக்காத காரணத்தினால் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து ஜெயபாலின் வாட்ஸ் அப்பில் ஸ்டார்லினும், டிக் ஷோனாவும் திருமணக் கோலத்தில் இருப்பது போன்ற புகைப்படம் வந்துள்ளது.
இதனால் அதிர்ச்சியடைந்த ஜெயபால், காதல் ஜோடியைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கினார்.
அப்போது காவல் துறையில் புகார் இருந்ததால் விசாரணைக்காக காதல் ஜோடி மற்றும் அவரது உறவினர்கள் காரில் வந்து கொண்டிருந்தனர்.
கார் கோவளம் அருகே வந்த போது, பின்பக்கமாக மூன்று காரில் வந்த 15-க்கும் மேற்பட்டவர்கள், காதல் ஜோடி வந்த காரின் முன்னும் பின்னும் இடித்ததால், டிரைவர் உடனடியாக காரை நிறுத்தினார்.
அதன் பின் காரில் இருந்து இறங்கிய 15 பேர் கொண்ட கும்பல், காதல் ஜோடியை அடித்து உதைத்தனர்.
காரின் பின் இருக்கையில் இருந்த ஸ்டார்லினை டிக் ஷோனா கண்முன்னே அரிவாளால் சரமாரியாக வெட்டினர். மேலும், ஸ்டார்லின் உறவினர்கள் சுரேஷ் (44), அருள் (58) ஆகியோருக்கும் வெட்டு விழுந்தது.
விரைந்து செயல்பட்ட அந்தக் கும்பல், டிக் ஷோனாவை மற்றொரு காரில் கடத்திச் சென்றது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிசார் படுகாயமடைந்த 3 பேரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து விசாரணை நடத்திய காவல் துறையினர், டிக் ஷோனாவின் அப்பா ஜெயபால், உறவினர்கள் செல்வம், ஸ்ரீதேவ், துரைராஜ் உள்ளிட்ட 15 பேர்மீது வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.