யாழ்ப்பாணம் ஊரெழுவில் நேற்று இரவு இனந்தெரியாதவர்கள் மேற்கொண்ட தாக்குதலில், தாயொருவர் உயிரிழந்துள்ள நிலையில், சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் இன்று கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் ஊரெழு மேற்கில் மகனைத் தாக்க வந்தவர்களைத் தடுக்க முற்பட்ட தாயை, இனந்தெரியாத கும்பல் தாக்கியதில் தாயார் உயிரிழந்தார்.
இந்த நிலையில், சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் இன்று காலை கோப்பாய் பொலிஸாரின் விசேட அணியினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஊரெழு மேற்கில், மகனை தாக்க வந்த கும்பலை தடுக்க முற்பட்ட தாயை, குறித்த குழுவினர் தாக்கியதில் தாயார் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
குறித்த கொடூர சம்பவம் கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஊரெழு மேற்கு சரஸ்வதி சனசமூக நிலையத்திற்கு அண்மையில் நேற்றிரவு 8 மணியளவில் இடம்பெற்றதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். வீட்டுக்குள் புகுந்த 8 பேர் கொண்ட கும்பல் ஒன்று இந்தக் கொலையைச் செய்தது எனவும், சம்பவத்தில் 58 வயதுடைய சந்திரராசா விஜயகுமாரி என்ற குடும்பப் பெண்ணே கொலை செய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சம்பவம் தொடரில் கொல்லப்பட்டவரின் மகன் அளித்துள்ள வாக்குமூலத்தின்படி,
“நேற்று வீதியில் சென்ற என்னுடன் சிலர் முரண்பட்டுக்கொண்டனர். அவர்கள் மேலும் சிலருடன் 8 பேராக எனது வீட்டுக்கு வந்தனர். அவர்கள் மோட்டார் சைக்கிள், துவிச்சக்கர வண்டிகளில் வந்தனர். கையில் பொல்லுகள் மற்றும் கம்பிகளுடன் வந்த அவர்கள் என்னைத் தாக்கினார்கள். அவர்கள் என்னைத் தாக்குவதை அம்மா தடுத்தார். அப்போது அம்மாவின் தலையில் பொல்லு மற்றும் கம்பியால் அவர்கள் தாக்கினார்கள். அம்மா என் முன்னிலையில் துடிதுடித்து உயிரிழந்தார்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்தச் சம்பவத்தால் அந்தப் பகுதியில் நேற்றிரவு பதற்றமான நிலை காணப்பட்டதோடு, தாக்குதலில் உயிரிழந்த தாயின் மகனும் படுகாயமடைந்தாக அறியமுடிகின்றது. சம்பவத்தில் உயிரிழந்த குடும்பப் பெண்ணின் சடலம் தெல்லிப்பளை வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் இன்று காலை கோப்பாய் பொலிஸாரின் விசேட அணியினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். ஏனையோர் விரைவில் கைது செய்யப்படுவார்கள் எனவும் பொலிஸார் அறிவித்துள்ளனர்.
இதேவேளை நேற்று பிற்பகல் முதல் இரவு வரை கோப்பாய், சுன்னாகம், மானிப்பாய், யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளில் பொலிஸார் விசேட சுற்றுக்காவல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த நிலையிலும், கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஊரழு மேற்கில் குறித்த கொலைச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதேவேளை, கடந்த 9ஆம் திகதி யாழ்ப்பாணம், மானிப்பாய், சுன்னாகம் பொலிஸ் பிரிவுகளில் பொலிஸார் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோதும், கோண்டாவில் பகுதியில் வாள்களுடன் வந்தவர்கள் அட்டகாசத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.