மணப்பாறை அருகே ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை சுர்ஜித் மரணமடைந்துள்ளதாக அதிகாரபூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

உடல் சிதைந்து தற்போது துர்நாற்றம் வரத்துடங்கியுள்ளதாக தமிழக வருவாய் நிர்வாக ஆணையர் அறிவித்துள்ளார். 80 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்று வந்த மீட்பு நடவடிக்கை தோல்வியில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சுர்ஜித்தை ரிக் இயந்திரத்தின் மூலம் மீட்கும் முயற்சி ஒருபுறம் நடைபெற்று கொண்டிருக்கையில் சிறுவன் விழுந்த ஆழ்துளை கிணறு சுற்றி உள்ள இடங்கள் அனைத்தும் தற்போது காவல்துறையினர்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது.

மேலும் ஆழ்துளை கிணறு அருகே அமைச்சர்கள், அரசு அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர் மற்றும் மருத்துவ குழுவினர், மீட்பு குழுவினருடன் ஆலோசனை நடத்தி வருவது அந்த இடத்தில் சற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன், குழிக்குள் இருந்து உள்ளூர் நேரப்படி இரவு 10.30 மணியளவில் இருந்து சிறுவன் உடல் அழுகிய நிலையில் துர்நாற்றம் வீசுவதாக தெரிவித்துள்ளார்.

இதனால் குழந்தை சுர்ஜித் மரணமடைந்து விட்டதாகவும், குழந்தையின் உடல் மீட்பது குறித்து மீட்புபடையினரின் தகவல் குறித்து அடுத்து அறிவிக்கப்படும் எனவும் அவர் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பான இறுதியான அறிவிப்பை மருத்துவர்களின் இறுதி அறிக்கைக்கு பின்னர் தெரிவிப்பதாக வருவாய் நிர்வாக ஆணையர் கூறியுள்ளார்.