இந்தியாவில் சாலையில் அனாதையாக விடப்பட்ட குழந்தையை வெளிநாட்டு தம்பதிகள் தத்தெடுத்த நிலையில் 14 ஆண்டுகளாக குழந்தை இல்லாத தங்களுக்கு குழந்தை கிடைத்துவிட்டது என மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

மத்தியபிரதேச மாநிலத்தின் நீமச் மாவட்டத்தில் ஒன்றரை வருடங்களுக்கு முன்னால், பிறந்து ஒருநாளே ஆன ஆண் குழந்தையை அவன் பெற்றோர் சாலையில் போட்டுவிட்டு சென்றனர்.
குழந்தைக்கு குஷ் என பெயர் வைக்கப்பட்ட நிலையில் அது காப்பகத்தில் சேர்க்கப்பட்டது.
தற்போது ஒன்றரை வயதாகும் குஷ்ஷை ஐரோப்பிய நாடான Maltaவை சேர்ந்த கிளன் ஜார்ஜ் – கடியா தம்பதி தத்தெடுத்துள்ளனர்.
கடந்த புதன்கிழமை இந்தியா வந்த அவர்கள் சட்டபடி குழந்தையை தத்தெடுத்து கொண்டனர். இது குறித்து தம்பதி கூறுகையில், எங்களுக்கு திருமணமாகி 14 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை.
இதையடுத்து குழந்தையை தத்தெடுக்க முடிவு செய்து ஐரோப்பாவில் உள்ள ஏஜன்சியின் உதவியை நாடினோம்.
அவர்கள் மூலமே இந்த குழந்தையை தத்தெடுத்தோம், எங்களுக்கு குழந்தை கிடைத்தது மகிழ்ச்சியளிக்கிறது என கூறியுள்ளனர்.

குஷ் வளர்ந்த காப்பகத்தின் அதிகாரி கூறுகையில், ஒரு வழியாக குஷ்ஷுக்கு அழகான குடும்பம் கிடைத்துவிட்டது, இனி அவன் வசதியாகவும், மகிழ்ச்சியாகவும் வாழ்வான் என நம்புகிறோம் என கூறியுள்ளார்.
