கோத்தபய ராஜபக்சே

இலங்கை அதிபர் தேர்தலில் 50 சதவிகித வாக்குகளை பெற்ற கோத்தபய ராஜபக்சே வெற்றி பெற்றுள்ளார். தோல்வியை ஏற்றுக்கொள்வதாக சஜித் பிரேமதாசா கூறியுள்ளார்.

இலங்கையில் அதிபர் பதவிக்கான தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துள்ளது. இந்த தேர்தலில் 35 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். எனினும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனா கட்சியின் வேட்பாளர் கோத்தபய ராஜபக்ச-வுக்கும், ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசா-வுக்கும் இடையே தான் கடும் போட்டி நிலவியது.

வாக்கு எண்ணிக்கை நேற்று தொடங்கிய நிலையில், தமிழர்கள் பகுதியில் சஜித் பிரேமதாசா அதிக ஓட்டுகளை பெற்றிருந்தார். அதேபோல, சிங்களவர்கள் பகுதியில் கோத்தபய அதிக ஓட்டுகளை பெற்றிருந்தார்.

இறுதி முடிவுகள் இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், கோத்தபய அதிக ஓட்டுகள் பெற்று முன்னிலையில் இருந்தார். 50 சதவிகித வாக்குகளை அவர் தாண்டினார்.

இதற்கிடையே, தான் வெற்றிபெற்றதாக கோத்தபய ராஜபக்ச சில மணி நேரங்களுக்கு முன்னர் அறிவித்தார். இதனால், அவரது கட்சியினர் கொண்டாடத்தில் ஈடுபட்டனர்.

எனினும், இறுதி முடிவுகள் மாலை அறிவிக்கப்படும் என்று அந்நாட்டு தேர்தல் ஆணையர் அறிவித்தார். இந்த நிலையில், மக்கள் கொடுத்த தீர்ப்பை ஏற்றுக்கொள்வதாக சஜித் பிரேமதாசா அறிவித்துள்ளார்.

கோத்தபய ராஜபக்சேவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார்.
