மட்டக்களப்பு ஆரையம்பதி திருநீற்றுக்கேணி குளத்தில் மீன்பிடியில் ஈடுபட்ட 3 இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் இன்று திங்கட்கிழமை (25) பகல் இடம்பெற்றுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்

இதில் ஆரையம்பதி முதலாம் பிரிவு திரூநீற்றுகேணி பிரதேசத்தைச் சேர்ந்த திருமணம் முடித்து 4 மாதங்கள் ஆகிய 20 வயதுடைய சுரேஸ்குமார் தர்ஷன், ஆரையம்பதி 2ம் பிரிவு செல்வநகரைச் சேர்ந்த 19 வயதுடைய நகுலேந்திரன் திவாகரன், 19 வயதுடைய செல்வன் சதுர்ஷன் ஆகிய மூவருமே இவ்வாறு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்

குறித்த குளம் அண்மையில் தோண்டப்பட்டு புனர்நிர்மாணப்பணிகள் இடம்பெற்றுள்ள நிலையில் சம்பவதினமான இன்று பகல் 12 மணியளவில்; 5 பேர் கொண்ட நண்பர்கள் மீன்பிடியில் ஈடுபட்டு குளித்துள்ளனர். இந்த நிலையில் குளத்தின் நடுப்பகுதியில் சகதியில் சிக்குண்டு நீரில் மூழ்கியுள்ளனர் இதன்போது இருவர் காப்பாற்றப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

ஏனைய மூவரையும் காப்பாற்ற முடியாமல் போன நிலையில் அவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர் .

இதனைத் தொடர்ந்து சுமார் 3 மணிநேர தேடுதலின் பின்னர் நீரில் முழ்கி உயிரிழந்த 3 சடலங்களை மீட்டு வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

இது தொடர்பான விசாரணைகளை காத்தான்குடி பொலிசார் மேற் கொண்டுவருகின்றனர்.


