லொட்டரி

இந்தியாவில் ஒருவருக்கு லொட்டரியில் ஆறு கோடி பரிசு விழுந்து இன்னும் முழுமையாக ஒரு வருடம் ஆகாத நிலையில், அவருக்கு அடுத்த அதிர்ஷ்டமாக அவரின் நிலத்தில் புதையல் கிடைத்துள்ளது.

கேரளாவின் திருவணந்தபுரம் அருகே உள்ள கிளிமானூர் பகுதியை சேர்ந்தவர் ரெத்தினாகரன் பிள்ளை. 60 வயதான இவர் அப்பகுதியின் முன்னாள் கவுன்சிலராக இருந்தவர்.
இவருக்கு லொட்டரி சீட்டு வாங்கும் பழக்கம் இருக்கிறது. இதனால் கடந்த 2018-ஆம் ஆண்டு கேரள அரசின் கிறிஸ்துமஸ் பம்பர் லொட்டரி ஒன்றை வாங்கினார்.

அதில் குலுக்கலில் இவருக்கு 6 கோடி ரூபாய் முதல் பரிசாக கிடைத்தது. இதனால் அவர் உடனடியாக அந்த பணத்தில், திருப்பாற்கடல் கிருஷ்ணசுவாமி கோவில் அருகே உள்ள தங்கள் குடும்பத்தின் பழைய வீட்டையும், அதன் அருகே கொஞ்சம் நிலத்தையும் வாங்கியுள்ளார்.

இதையடுத்து அந்த நிலத்தை விவசாயம் செய்வதற்காக ரெத்தினாகரன், தொழிலாளர்களை வரவழைத்து மண்ணை தோண்டும் பணியில் இறங்கியுள்ளார்.
அப்போது பூமிக்குள் மண் பானைகள் புதைந்து இருப்பது தெரியவந்துள்ளது. அதன் பின் தொடர்ந்து தோண்டிய போது உள்ளே 6 மண் பானைகள் இருந்துள்ளன.

அதன் உள்ளே என்ன இருக்கிறது என்று பார்த்த போது, சுமார் 2,600 செப்பு நாணயங்கள் இருந்துள்ளது. இது குறித்து உடனடியாக பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டதால், பொலிசார் அப்பகுதிக்கு விரைந்துள்ளனர்.
பொலிசார் சொப்பு நாணயங்களை எண்ணியுள்ளனர். தற்போது அந்த நாணயங்கள் அரசிடம் ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
