ஜேர்மானிய கோடீஸ்வரர் ஒருவர் நியூசிலாந்தில் தாம் வாங்கிய சொகுசு தீவில் தம்முடன் குடியிருக்க 10 பேர் தேவை என அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

ஜேர்மானிய கோடீஸ்வரர் Karl Reipen கடந்த 2000 ஆம் ஆண்டு விடுமுறைக்காக நியூசிலாந்துக்கு சென்ற நிலையில், அங்குள்ள இயற்கை எழில் கொஞ்சும் பகுதிகளால் ஈர்க்கப்பட்டு அவாகினோ என்ற எஸ்டேட்டை விலைக்கு வாங்கினார்.
மட்டுமின்றி தனித் தீவு போன்ற அந்த எஸ்டேட்டில் அவர் குடியேறவும் செய்தார். உலகின் அனைத்து வசதிகளுடனும் பல ஆண்டுகள் தனித்து வாழ்ந்து வந்த அவருக்கு, தற்போது தம்முடன் அங்குள்ள இயற்கையை ரசிக்க, பேச்சுத் துணைக்கு 10 பேர் இருந்தால் வாழ்க்கை குதூகலமாக இருக்கும் என்ற எண்ணம் வந்துள்ளது.
இதனையடுத்து அந்த சொகுசு தீவில் முற்றிலும் இலவசமாக குடியிருக்க ஆள் தேடும் நடவடிக்கையில் களமிறங்கியுள்ளார் கோடீஸ்வரர் கார்ல் ரீபன்.

வாழ்க்கையில் ஒரு மாறுதல் தேவை என எண்ணுபவர்களுக்கு இது ஒரு புதிய அனுபவமாக இருக்கும் என்பது உறுதி என தெரிவித்துள்ளார் கோடீஸ்வரர் கார்ல் ரீபன்.
குறித்த எஸ்டேட்டை விலைக்கு வாங்கிய போது, எனது சிறார் பருவத்து கனவு நனவாகியுள்ளது என தெரிவித்த அவர், அந்த எஸ்டேட்டை உலகின் அனைத்து வசதிகளாலும் நிரப்புவேன் என்றார்.
கோடீஸ்வரர் கார்ல் ரீபன் குறிப்பிடும் இந்த அவாகினோ எஸ்டேட் ஒருபக்கம் டாஸ்மன் கடல் மற்றும் மறுபக்கம் அவாகினோ ஆறால் சூழப்பட்டுள்ளது. இங்கு 26 தொழுவங்களும் ஒரு திராட்சைத் தோட்டமும் சில குடியிருப்புகளும் அமைந்துள்ளது.

18 வயது முதல் 70 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு முன்னுரிமை என அறிவித்துள்ள அவர், சொந்தமாக குதிரை வைத்திருப்பவர்கள் அதையும் கூட்டிவர ஊக்கப்படுத்தியுள்ளார்.
அவாகினோ எஸ்டேட்டை விலைக்கு வாங்கியது முதல் தனித்து வாழ்ந்து வந்த கார்ல் ரீபன் ஒருகட்டத்தில் விற்றுத் தொலைத்துவிட்டு மீண்டும் ஜேர்மனிக்கு திரும்ப முடிவு செய்திருந்தார்.
அதன்படி கடந்த 2016 ஆம் ஆண்டு 8.5 மில்லியன் டொலருக்கு அந்த எஸ்டேட்டை விற்பனைக்கு வைத்தார்.
ஆனால் எவரும் வாங்க முன்வரவில்லை. இதே எஸ்டேட்டை கடந்த 2008 ஆம் ஆண்டு தொண்டு நிறுவனங்களுக்கு கையளிக்க இருப்பதாக கூறி சர்வதேச ஊடகங்களின் கவனத்தை ஈர்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
