இலங்கையில் பேருந்து பயணங்களில் ஈடுபடுவோருக்கு விடுக்கப்பட்ட முக்கிய எச்சரிக்கை!

இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

இலங்கையில் பேருந்து போக்குவரத்தை பயன்படுத்துபவர்களான பேருந்து உரிமையாளர்கள், சாரதிகள் மற்றும் நடத்துனர்களுக்கும் சுகாதார வழிமுறைகளை முறையாக பின்பற்றுமாறு கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நாட்டில் கடந்த மார்ச் மாதம் கொரோனா தொற்றுக்கு இலக்கான முதலாவது இலங்கையர் அடையாளம் காணப்பட்டதை அடுத்து தொடர்ந்து ஊரடங்கு சட்டம் உள்ளிட்ட கடுமையான சுகாதார சட்டங்கள் அமுல்படுத்தப்பட்டிருந்தன.

இதனையடுத்து நாட்டில் கொரோனா தொற்று படிப்படியாக கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டிருந்த நிலையில் தற்போது மீண்டும் கொரோனா வைரஸ் தொற்று தீவிரமடைந்துள்ளது.

இவ்வாறான நிலையில் கட்டாயமாக சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகளை அனைவரும் பின்பற்ற வேண்டும் என தொடர்ச்சியாக அறிவுறுத்தல் வழங்கப்பட்டு வருகிறது.

இலங்கையில் பேருந்து பயணங்களில் ஈடுபடும் மக்கள் அதிகளவில் உள்ள நிலையில் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு சில அறிவுறுத்தல்களை விடுத்துள்ளது.

அதற்கமைய ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் கொமாண்டர் நிலான் மிரென்டா குறிப்பிடுகையில்,

பேருந்துகளில் ஆசனங்களின் எண்ணிக்கைக்கு ஏற்பவே பயணிகளை ஏற்றிச்செல்ல முடியும். பேருந்துகளில் பயணிக்கும் அனைவரும் முகக்கவசம் அணிவது கட்டாயம்.

சுகாதார நடைமுறைகளை பின்பற்றாத வகையில் செயற்படும் பேருந்து உரிமையாளர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் சுகாதார அமைச்சினால் வௌியிடப்பட்டுள்ள சுகாதார நடைமுறைகளை தொடர்ந்தும் பின்பற்றுமாறு பேருந்து உரிமையாளர்களுக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் முகக்கவசம் அணிந்துள்ள பயணிகளை மாத்திரம் பேருந்தில் செல்ல அனுமதிக்குமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதுடன், நடத்துனர்கள் மற்றும் சாரதிகள் ஆகியோரும் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.