கதிர்காமத்திற்கு சென்ற கொரோனா நோயாளி!
கதிர்காமத்திற்கு யாத்திரைக்கு சென்ற நபர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இதனை அடுத்து குறித்த நபர் கதிர்காமத்தில் தங்கியிருந்த விடுமுறை விடுதி, அதன் உரிமையார், அவரது மனைவி மற்றும் ஊழியர்கள் உட்பட் 9 பேர் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார பரிசோதகர் சமன் திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
பொலநறுவை, திவுலன்கடவல பிரதேசத்தை சேர்ந்த 25 வயதுடைய இராணுவ கொப்ரல் ஒருவரே இவ்வாறு கதிர்காம யாத்திரைக்கு சென்றுள்ளார்.
அவர் கடந்த 7ஆம் திகதி 20 பேருடன் கதிர்காமத்திற்கு யாத்திரைக்கு சென்றுள்ளார். பின்னர் அங்குள்ள விடுதி ஒன்றில் தங்கியுள்ளார்.அத்துடன் அவர் கிரிவெஹர மற்றும் தேவலாயத்திற்கு சென்று 8ஆம் திகதி அங்கிருந்து சென்றுள்ளதாக சுகாதார அமைச்சினால் ஊவா மாகாண சபையின் சுகாதார பணிப்பாளருக்கு குறித்த தகவல் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் குறித்த நபர் அங்கு சில பகுதிகளுக்கு சென்று பலருடன் பழகியுள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது. அதற்கமைய அவர் கதிர்காமம் சென்றது முதல் அவர் பழகிய நபர்கள் தொடர்பிலான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இதனை அடுத்து எதிர்வரும் நாட்களில் கதிர்காமத்தில் மேலும் சில கொரோனா நோயாளிகள் அடையாளம் காணப்படலாம் என்பதனால் அனைத்து மக்களும் அத்தியாவசிய விடயங்களை தவிர்த்து வெளியே செல்ல வேண்டாம் எனவும், மக்களுடன் பழகுவது மிகவும் அவதானமாக மேற்கொள்ள வேண்டும் எனவும், முக கவசம் அணிவது கட்டாயம் எனவும் சுகாதார ஆலோசனைகளை கடுமையாக பின்பற்ற வேண்டும் எனவும் அப் பிரதேச மக்களுக்கு சுகாதாரப் பிரிவினால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.