இலங்கை
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் மாணவர்களுக்கு சலுகை வழங்கவுள்ளதாக கல்வி அமைச்சர் டலஸ் அளகப்பெரும தெரிவித்தார்.
இவ்வருடத்தில் ஒக்டோபர் 11ஆம் திகதி நடாத்தப்படவுள்ள 05ஆம் தரத்துக்கான புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு, நாட்டில் நிலவும் சூழ்நிலையை கருத்திற்கொண்டு, அவர்களின் கல்வி நடவடிக்கைகளில் ஏற்பட்டுள்ள பாதிப்பு மற்றும் அழுத்தங்களை இல்லாமல் செய்யும் வகையில், நியாயமான முறையிலும் மனிதநேயத்துடனும் அணுகும் வகையில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக, அவர் குறிப்பிட்டுள்ளார்.
கல்வி அமைச்சில் புதிய இணையத்தளத்தை திறந்து வைத்து உரையாற்றியபோது, அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
அதற்கமைய, இம்முறை தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு, பரீட்சையின் முதலாவது வினாத்தாள் பத்திரத்திற்கு இதுவரை வழங்கப்பட்ட 45 நிமிடங்களை 15 நிமிடங்களினால் நீடித்து ஒரு மணி நேரமாக வழங்கவும், மாணவர்கள் சரியாக விடையை பெறுவதற்கான வாய்ப்பை மேலும் அதிகரிக்கும் நோக்கில், இரண்டாவது வினாப்பத்திரத்தில் வழங்கப்பட்ட 04 தெரிவு வினாக்களை, 03ஆக குறைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என, அமைச்சர் மேலும் தெரிவித்தார்.