கோழிக்கோடு விமான விபத்தில் உயிரிழந்த விமானி.!
நேற்றைய தினம் இடம்பெற்ற கோழிக்கோடு விமான விபத்தில் உயிரிழந்த விமானி தீபக் வி. சாத்தே தனது 30 ஆண்டு கால பணியின் போது எந்தவொரு விபத்தையும் சந்தித்ததில்லை என கூறப்பட்டுள்ளது.
துபாயிலிருந்து இந்தியர்களை ஏற்றிக் கொண்டு கோழிக்கோடு வந்தடைந்த ஏர்இந்தியா விமானம் ஓடுதளத்தில் தரையிறங்கும் போது விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் விமானத்தின் விமானி தீபக் வி. சாத்தே உள்ளிட்ட 18 பேர் பலியாகியுள்ளனர்.
இந்த நிலையில் உயிரிழந்த விமானி தீபக் தொடர்பில் முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளது. மும்பையை சேர்ந்த விமானி தீபக் வி. சாத்தே 30 ஆண்டுகளாக தனது விமானம் ஓட்டுனர் பணியை தொடர்ந்து வந்துள்ளார்.
புனேவில் உள்ள தேசிய பாதுகாப்பு அகாடமியில் பட்டம் பெற்ற பிறகு விமானப்படையில் இணைந்தார். இந்திய விமானப்படை பயிற்சி மையத்தில் பயிற்சியாளராகவும் இருந்தார். கடந்த 2013-ம் ஆண்டு விமானப்படையிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு கடந்த 17 ஆண்டுகளாக ஏர்இந்தியாவில் பணி புரிந்து வருகிறார்.
அனுபவம் கொண்டவர் என்பதால், ஏர்இந்தியாவில் சற்று பழமையான விமானங்களை கேப்டன் தீபக் வி. சாத்தே இயக்குவார் என்று சொல்லப்படுகிறது.
கோழிக்கோட்டில் விபத்தில் சிக்கிய விமானம் கூட சற்று பழமையானது என்கிற தகவலும் உள்ளது. இந்த விமானத்தின் துணை விமானி கேப்டன் அகிலேஷ் குமாரும் விபத்தில் பலியாகி விட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கோழிக்கோடு விபத்தில் சிக்கிய விமானத்தை கடைசிக்கட்டத்தில் இன்ஜீனை கேப்டன் தீபக் சாத்தே அணைத்துள்ளார். இதனால், விமானம் வேகம் குறைந்து ரன்வேயில் சறுக்கிக் கொண்டே சென்று இரண்டு துண்டாக உடைந்துள்ளது. இவரின், 30 ஆண்டு கால சேவையில் இவர் இயக்கிய விமானங்கள் ஒரு முறை கூட சிறு விபத்தில் கூட சிக்கியதில்லை.
ஆனால், முதல் விபத்திலேயே உயிரிழந்தும் போனது ஏர் இந்தியாவில் பணி புரிந்து வரும் அவரின் நண்பர்களை சோகத்திற்குள்ளாக்கியுள்ளது. தற்போது 58 வயதான தீபக் வி. சாத்தேவுக்கு மனைவியும் இரு மகன்களும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.