தேசியப் பட்டியல் பெயர் உறுதியானது
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு கிடைக்கப்பெற்ற வாக்குகளின் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ள தேசிய பட்டியல் ஆசனத்தை யாருக்கு வழங்குவது என்கின்ற சிக்கல் எழுந்திருந்தது.
இந்த நிலையில் அதனை தீர்த்து வைக்கும் முகமாக திருகோணமலையில் உள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் இல்லத்தில் கலந்துரையாடலொன்று நேற்றைய தினம் இடம்பெற்றிருந்தது.
குறித்த கலந்துரையாடலில் தமிழரசுக் கட்சியின் சிரேஸ்ட தலைவரும், வட மாகாண முன்னாள் அவைத் தலைவருமான சீ.வி.கே.சிவஞானம், தமிழரசுக் கட்சியின் பொருளாளர் கனகசபாபதி, தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் துரைராசசிங்கம் ஆகியோர் ஈடுபட்டிருந்தனர்.
நேற்றைய தினம் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில் சுமந்திரன் மற்றும் சிறீதரன் போன்றவர்களும் இணைந்திருந்ததாக திருகோணமலை செய்திகள் தெரிவிக்கின்றன. இவ்வாறான சூழ்நிலையில் பலரது கருத்துக்களும் முன்வைக்கப்பட்டிருக்கிறது.
2004ஆம் ஆண்டு காலப்பகுதியில் மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம் தோல்வியுற்ற போது கட்சியின் மூத்த தலைவருக்கு தேசிய பட்டியல் வழங்கப்பட்டமையும் இந்த கலந்துரையாடலில் கலந்து கொண்டோரால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் ஆசனம் அம்பாறை மாவட்டத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக நாவிதன்வெளி பிரதேச சபையின் தவிசாளர் தவராசா கலையரசன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
மாவை சேனாதிராசாவின் இணக்கப்பாட்டுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் அம்பாறை மாவட்டத்திற்கு வழங்கப்பட உள்ளதாக தெரியவருகின்றது.
இதன்படி, கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் உறுப்பினராக தவராசா கலையரசன் நியமிக்கப்பட உள்ளார்.
இதன் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு சற்று முன்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கிருஸ்ணப்பிள்ளை துரைராசசிங்கம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.