புதையல் தோண்டிய நபர் கைது!
இலங்கையில் இறந்து போன தந்தை கனவில் தோன்றி காட்டிய புதையலை தோண்டி எடுத்த மகனை யானை முத்துக்களுடன் கைது செய்துள்ளதாக புத்தல கோனகங்ஹார பொலிஸார் தகவல் தெரிவித்துள்ளனர்.
இது பற்றி கைதான நபர் குறிப்பிடுகையில்,எனது தந்தை உயிருடன் இல்லை. ஒரு நாள் தந்தை கனவில் தோன்றினார். அப்போது அவர் புதையல் ஒன்று இருப்பதாக என்னிடம் தெரிவித்தார். அது எனக்குரியது அதனை எடுத்துக்கொள்ளுமாறு தெரிவித்தார் என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நபர் கோனகங்ஹார வகுருவெல பிரதேசத்தில் நிலத்தை தோண்டி புதையல் எடுத்தார் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் கருங்கல்லில் செய்யப்பட்ட கலசத்தில் இந்த யானை முத்துக்கள் இருந்துள்ளன. அதனை உடைத்து சந்தேக நபர் அவற்றை எடுத்துள்ளார். மாணிக்க கங்கையில் வீசப்பட்ட கல் கலசம், யானை முத்துக்கள் வைக்கப்பட்டிருந்த பேழை கால்வாய் ஒன்றில் வீசப்பட்டிருந்த நிலையில் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்றுள்ளது.
இந்த நிலையில் புதையலில் கிடைத்த யானை முத்துகளை எடுத்துக்கொண்டு வீட்டுக்கு சென்றுக்கொண்டிருந்த போதே சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த நபர் கோனகங்ஹார பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் தனிப்பட்ட ஒற்றர் ஒருவர் வழங்கிய தகவலுக்கு அமையவே கைது செய்யப்பட்டுள்ளதுடன், கழிவறை குழியை வெட்டுவதாக கூறி சந்தேக நபர் புதையலை தோண்டி எடுத்துள்ளார்.
வகுருவெல புத்தல பகுதியை சேர்ந்த 28 வயதான குறித்த சந்தேக நபர் இன்று வெல்லவாய நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தபட உள்ளார்.