தமிழகம்..
தமிழகத்தில் சேலம் மாவட்டத்தில் உள்ள தாரமங்கலம் அருகேயுள்ள சின்னாக்கவுண்டம்பட்டி பிரதேசத்தை சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது 43). இவர் முன்னாள் கவுன்சிலராக இருந்தவர். இவர் தாரமங்கலம் – சங்ககிரி சாலையில் மளிகைக்கடை ஒன்றை நடத்தி வந்தார். இவரது மனைவி மல்லிகா (வயது 40).
இவர்கள் இருவருக்கும் நேகா என்ற 12 வயது மகளும், நந்தகிஷோர் என்ற 10 வயது மகனும் இருக்கின்றனர். இவ்வாறு இருக்கையில் நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் பழனிச்சாமி, தனது மனைவி மல்லிகாவிற்கு இரு சக்கர வாகனம் இயக்க பழக்கிக் கொடுத்துள்ளார்.
தாரமங்கலம் புறவழிச்சாலை பகுதியில் இருசக்கர வாகனம் இயக்க பழகிய நிலையில், மல்லிகா வாகனத்தை இயக்கிகொண்டிருந்துள்ளார். பழனிச்சாமி பின்னால் அமர்ந்துகொண்டுள்ளார். இதன் போது அடையாளம் தெரியாத வாகனமொன்று இவர்களின் இரு சக்கர வாகனத்தின் மீது மோதிவிட்டு நிர்க்கமால் வேகமாக சென்றுள்ளது.
நிலைதடுமாறி கீழே விழுந்த இருவரும் உயிருக்கு துடிதுடித்து வீதியில் போராடிய நிலையில், அவ்வழியாக சென்றவர்கள் இவர்களை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இவர்கள் இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில் இந்த விபத்து சம்பவம் தொடர்பில் தகவல் அறிந்த காவல் துறையினர், இது தொடர்பில் விசாரணைகளை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.