லங்கா ஐஓசி எரிபொருள் நிரப்பும் நிலையங்களிலும் நாளை முதல் வாகனங்களுக்கான எரிபொருள் வழங்கல் மட்டுப்படுத்தப்படவுள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
அதற்கமைய, உந்துருளி, முச்சக்கரவண்டி, மகிழுந்து மற்றும் சிற்றூர்திகளுக்கு மட்டுப்படுத்தப்பட்ட தொகைக்கு மாத்திரமே எரிபொருள் வழங்கப்படுமென லங்காஐஓசி அறிவித்துள்ளது.
அதற்கமைய, உந்துருளிகளுக்கு அதிகபட்சமாக 2,000 ரூபாவுக்கும், முச்சக்கர வாகனங்களுக்கு அதிகபட்சமாக 3,000 ரூபாவுக்கும், மகிழுந்து, ஜீப் மற்றும் சிற்றூர்திகளுக்கு அதிகபட்சமாக 8,000 ரூபாவுக்கும் மாத்திரமே லங்கா ஐஓசி எரிபொருள் நிலையங்களில் எரிபொருள் வழங்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், பேருந்துகள், பாரஊர்திகள் மற்றும் வணிக வாகனங்களுக்கு இந்த வரையறை பொருந்தாது என லங்கா ஐஓசி அறிவித்துள்ளது. இதேவேளை, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திலும் மேற்படி வாகனங்களுக்கும் எரிபொருள் வழங்கலும் கடந்த 5 ஆம்திகதி முதல் மட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.